அதிமுகவின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் கடந்த மார்ச் 27ஆம் தேதி மாலை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். நாமக்கல் தொகுதியின் வேட்பாளராக ஸ்ரீதேவி பி.எஸ். மோகன் அறிவிக்கப்பட்டார்.
2011 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இருமுறை எம்.எல்.ஏ. ஆக இருந்தவர் பாஸ்கர். ஆனால், 2021ஆம் ஆண்டு நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இந்த முறை சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தார். முன்னாள் அமைச்சரும் அதிமுக நாமக்கல் மாவட்டச் செயலாளருமான தங்கமணிக்கும் இவருக்கும் கடந்த சில வருடங்களாக பணிப்போர் நடந்து வருவதாகவும், அதனால்தான் இவருக்கு இந்த தேர்தலில் சீட் கிடைக்கவில்லை என பாஸ்கர் ஆதரவாளர்கள் புலம்புகிறார்கள்.

முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டின் முன்பு சனிக்கிழமை (மார்ச் 28) பாஸ்கர் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். மாநகராட்சியில் உள்ள 39 வார்டு செயலாளர்கள் மற்றும் 4 ஒன்றிய செயலாளர்கள் கட்சியின் உயர்தலைமையிடம் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். அடுத்த கட்டமாக, பிரச்சாரத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியிடம் தனது ஆதரவாளர்களுடன் சென்று புகார் செய்ய இருக்கிறார் பாஸ்கர்.
பாஸ்கரின் கோரிக்கை.. 2026 தேர்தலில் நாமக்கல் தொகுதியில் தனக்கு சீட் வழங்க வேண்டும். இல்லையெனில், தங்கமணியிடம் இருக்கும் 6 எம்.எல்.ஏ. தொகுதிகள் அடங்கிய மாவட்டச் செயலாளர் பொறுப்பை பிரித்து, 3 தொகுதிகள் அடங்கிய புதிய மாவட்டச் செயலாளர் பதவி தனக்கு வழங்க வேண்டும் என கேட்கிறார்.
இதற்கு விடை தெரியாவிட்டால், நாமக்கல் தொகுதியில் அதிமுக கட்சியின் போட்டி வேட்பாளராக பாஸ்கர் களம் இறங்குவார் என்று அவரது ஆதரவாளர்கள் கோபமாக பத்திரிக்கையாளர்களிடம் பேசி வருகிறார்கள்.









