தமிழக அரசியலில் முக்கிய கட்சியாக இருந்து வந்த அதிமுக, 2026 தேர்தலுக்கு பிறகு தொடர்ந்து பல சிக்கல்களை சந்தித்து வருகிறது. கடந்த முறை தமிழக சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது, அதிமுக சட்டமன்றத்திலேயே இரண்டாக பிரிந்தது.
ஒரு அணியாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 22 பேர் தவெகவுக்கு எதிராக வாக்களித்தனர். மற்றொரு அணியாக எஸ்.பி. வேலுமணி தலைமையில் சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இது நடந்த சில வாரங்களிலேயே அதிமுக சிறிது சிறிதாக உடையத் தொடங்கியது.
முதலில் கட்சியின் செய்தித்தாள் உள்ளிட்டவற்றை எஸ்.பி. வேலுமணி கைப்பற்றினார். பின்னர் எடப்பாடி பழனிசாமி புதிய செய்தித்தாளை தொடங்கினார். இப்படி இரு தரப்பும் மாறி மாறி மோதிக்கொண்டிருந்த சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு, தவெக அதிமுக எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்கத் தொடங்கியது.
இதன் விளைவாக, எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த 4 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். சில எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமியுடன் மீண்டும் ஒன்றிணைந்தனர். பின்னர் எஸ்.பி. வேலுமணி மற்றும் எடப்பாடி பழனிசாமி இருவரும் பேசி சமரசம் செய்து அதிமுகவை ஒன்றிணைத்தனர்.
ஆனால் இந்த ஒன்றிணைப்பில் சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் இணையவில்லை. இதன் மூலம் அவர்கள் அதிமுகவில் இணையவார்களா அல்லது தவெகவில் சேரவார்களா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று செய்தியாளர்களை சந்தித்த சி. விஜயபாஸ்கர்,
“நான் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் பயணிக்கிறேன். தற்போதைய அரசியல் சூழ்நிலை என்ன? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து ஆலோசித்தோம்.
இந்தத் தொகுதி மக்களின் கருத்துகளையும் கேட்ட பிறகே அடுத்த நகர்வு குறித்து விரைவில் தெரிவிப்பேன்,” என்றார்.
இதற்கிடையில், “90% அதிமுகவினர் தவெகவில் இணைய விரும்புகிறார்கள்” என்று அமைச்சர் அதவ் அர்ச்சுனா சமீபத்தில் நடைபெற்ற கட்சி கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இதனால் அதிமுகவை உடைக்க அதவ் தீவிரமாக முயற்சி செய்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.









