குரூப் 2 மற்றும் 2A பதவிகளுக்கான 2ம் கட்ட கலந்தாய்வு இம்மாதம் 29-ம் தேதி நடைபெறுமென தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தெரிவித்துள்ளது.
குரூப் 2 மற்றும் 2A தேர்வு:
போட்டித் தேர்வுகளின் மூலம் அரசு காலிப் பணியிடங்களை ஆண்டுதோறும் TNPSC நிரப்பிவருகிறது.அந்த வகையில், 2,327 காலி பணியிடங்களை குரூப் 2 மற்றும் 2A மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி வெளியானது.அதற்கான முதல்நிலை தேர்வு அதே ஆண்டு செப்டம்பர் 14ல் நடைபெற்றது.இரண்டாம் நிலை தேர்வு, இந்த ஆண்டு பிப்ரவரி 8ம் தேதி நடைபெற்றது. அந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தோரின் மதிப்பெண் மற்றும் தரவரிசை பட்டியல் இந்த ஆண்டு மே 5ல் வெளியானது.

முதற்கட்ட கலந்தாய்வு:
குரூப் 2 மற்றும் 2A தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான, முதற்கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு இந்த ஆண்டு ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 1 வரை நடைபெற்றது.
இரண்டாம் கட்ட கலந்தாய்வு:
குரூப் 2 மற்றும் 2A தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு இம்மாதம் 29ம் தேதி நடைபெறுமென TNPSC அறிவித்துள்ளது. நேரம் மற்றும் இதர விவரங்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறுஞ்செய்தி (SMS) மற்றும் மின்னஞ்சல் (E-mail) மூலமாகவும் விவரங்களை TNPSC அனுப்பிவைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக முக்கியமாக, இந்த நாளில் (29.08.2025) கலந்தாய்விற்கு வரத் தவறுவோருக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது என்று TNPSC திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.









