கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சேர்ந்த 20 வயது மாணவி ரிதுபர்ணா, உலகப் புகழ்பெற்ற ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தில் ரூ.72.9 லட்சம் வருடச் சம்பளத்தில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளார். சயாத்ரி பொறியியல் மற்றும் மேலாண்மை கல்லூரியில் Robotics and Automation துறையில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.
மருத்துவராகும் கனவுடன் NEET தேர்வை எழுதிய ரிதுபர்ணா, அதில் தோல்வி அடைந்தார். மனவேதனையிலிருந்தாலும், பெற்றோர் ஆலோசனைப்படி பொறியியல் துறையில் சேர்ந்தார். ஆரம்பத்தில் குறைந்த ஆர்வம் கொண்ட இவர், படிக்கப் படிக்க இந்த துறையின் மீதான ஆர்வம் அதிகரித்தது.

கல்லூரியில் சக மாணவர்களுடன் இணைந்து, பாக்கு மரங்களைப் பாதுகாக்கப் பூச்சிக்கொல்லி தெளிக்கும் கருவி, அறுவடை செய்யும் ரோபோ, தரம் பிரிக்கும் இயந்திரம் ஆகியவை உருவாக்கினார். அவரது ப்ராஜெக்ட் கோவாவில் நடைபெற்ற சர்வதேச ரோபோட்டிக்ஸ் மாநாட்டில் பதக்கம் வென்றது. இது அவரை சிங்கப்பூர், ஜப்பான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட நிபுணர்களுடன் தொடர்பில் கொண்டுவந்தது.
அடுத்த கட்டமாக, இங்கிலாந்தின் ரோல்ஸ் ராய்ஸ் ஜெட் இன்ஜின் பிரிவில், ₹39.58 லட்சம் சம்பளத்திற்கு 1 ஆண்டு இன்டர்ன்ஷிப் செய்து வந்தார். அவருடைய திறமையைப் பாராட்டிய அந்த நிறுவனம், ஆண்டுக்கு ₹72.9 லட்சம் சம்பளத்துடன் நிரந்தர வேலை வழங்கியுள்ளது.

அவரது சாதனையைப் பாராட்டக் கர்நாடக சட்டமன்றத் தலைவர் யு.டி. காதர், கல்லூரிக்கு நேரில் சென்று மைசூர் தலைப்பாகை, சால்வை, பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார்.









