அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், தற்போது இந்த மோதல் டிஜிட்டல் போராக மாறியுள்ளது. மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் உலகப் புகழ் பெற்ற அமெரிக்காவின் ‘ஸ்டிரைக்கர்’ நிறுவனம் மீது ஈரான் ஆதரவு பெற்ற ‘ஹண்டலா’ என்ற ஹேக்கர் குழு மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
சமீபத்தில், இஸ்ரேலுக்கு தொழில்நுட்ப ரீதியாக ஆதரவளிப்பதாக கருதப்படும் சில அமெரிக்க டெக் நிறுவனங்களின் அலுவலகங்கள், ஆராய்ச்சி மையங்கள் மற்றும் data centres ஆகியவை ஈரானின் அடுத்த இலக்காக மாற வாய்ப்புள்ளதாக எச்சரித்து இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சுமார் 50 டெராபைட் அளவிலான மிக முக்கியமான ரகசியத் தகவல்களைத் திருடிவிட்டதாக அந்த ஹேக்கர் குழு அறிவித்திருப்பது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் தெற்கு ஈரானின் மினாப் பகுதியில் உள்ள ஒரு பள்ளி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 170-க்கும் மேற்பட்ட பிஞ்சு உயிர்கள் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹேக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
மைக்ரோசாஃப்ட் கிளவுட் சர்வர்களில் ஊடுருவி, நிறுவனத்தின் ஒட்டுமொத்த நெட்வொர்க்கையும் முடக்கியுள்ள ஹேக்கர்கள், லாகின் பக்கங்களிலேயே தங்களது லோகோவை பதிவேற்றி சவால் விட்டுள்ளனர்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய வங்கிகள் மற்றும் பொருளாதார மையங்களே தங்களது அடுத்த இலக்கு என அவர்கள் எச்சரித்திருப்பது, வல்லரசு நாடுகளின் பொருளாதாரக் கட்டமைப்பையே சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.









